இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை – மனித மோதலுக்குச் சுற்றாடல் நட்புறவுமிக்க நிலையான தீர்வாக மூங்கில்களைப் பயன்படுத்தி வேலி அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா உடன்பாடு தெரிவித்துள்ளது.
சுற்றாடல் பிரதி அமைச்சர் அந்தோனி ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சீனாவிலுள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அங்கு நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில் மூங்கில் செய்கை, நவீன பதப்படுத்துதல் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை தயாரிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்புகளும் நினைவு கூரப்பட்டன.
இலங்கையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக மூங்கில் அடிப்படையிலான உயிர் வேலியை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரதி அமைச்சர் விடுத்த உத்தியோகபூர்வ கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சீனத் தரப்பு, இத்திட்டத்திற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தது.
யானை – மனித மோதலுக்குத் தீர்வு காண்பதுடன், மூங்கில் சார்ந்த தயாரிப்புகள் மூலம் பிரதேச மக்களின் பொருளாதார மட்டத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








